செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

காற்றும் அதன் மருத்துவக் குணமும்


42ஆம் பாடம்
வடக்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக்கு, வாடை என்றும், வடகாற்று என்றும் பெயர்.
தெற்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக்குத், தென்றல் என்றும், தென்காற்று என்றும் பெயர்.
தென்றற் காற்று, உடம்புக்கு ஆரோக்கியத்தைத் தரும்; அது சித்திரை, வைகாசி மாதங்களில் வீசும்.
கிழக்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக்குக் கொண்டல் என்றும், கீழ்காற்று என்றும் பெயர்.
மேற்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக்குக் கோடை என்றும், கச்சான் என்றும், மேல் காற்று என்றும் பெயர்.
-       பாலபாடம், 2003:35 – 36

திசைகள்


41ஆம் பாடம்
திக்கு நான்கு, அவை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு.
சூரியன் உதிக்கின்ற திக்குக்குப் பெயர் கிழக்கு.
கிழக்கு முகமாக நிற்கிறவருக்கு வலப் பக்கமாகிய திக்குக்குப் பெயர் தெற்கு.
கிழக்கு முகமாக நிற்கிறவருக்கு பிற்பக்கமாகிய திக்குக்குப் பெயர் மேற்கு.
கிழக்கு முகமாக நிற்கிறவருக்கு இடப்பக்கமாகிய திக்குக்குப் பெயர் வடக்கு.
தெற்கும் கிழக்குமாகிய மூலைக்குப் பெயர் தென்கிழக்கு.
தெற்கும் மேற்குமகிய மூலைக்குப் பெயர் தென்மேற்கு.
வடக்கும் மேற்குமாகிய மூலைக்குப் பெயர் வடமேற்கு.
வடக்கும் கிழக்குமாகிய மூலைக்குப் பெயர் வடகிழக்கு.
-       பாலபாடம், 2003:35

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

தூய்மை

                                            35ஆம் பாடம்

நித்தமும் வேட்டியை நன்றாகத் தோய்த்து அலப்பிப் பிழிந்து, உலரப் போடு.
உடம்பில் அழுக்கைத் தேய்த்து ஸ்நானம் பண்ணு.
நெடுநேரம் சலத்திலே நில்லாதே.
உடம்பு வெயர்க்கும் பொழுது ஸ்நானம் பண்ணாதே.
ஸ்நானம் பண்ணின உடனே, சூடு பிறக்கும்படி, ஈரத்தைக்(த்) துவட்டிப் போடு.
தோய்த்து உலர்ந்த சுத்த வஸ்திரம் தரித்துக் கொள்.
அழுக்கு வேட்டியாவது, ஈரவேட்டியாவது, தரியாதே.
சனிக்கிழமை தோறும், எண்ணெய் தேய்த்துக் கொண்டு தலை முழுகு.
எப்பொழுதும் உடம்பும், வஸ்திரமும் சுத்தமாய் இருந்தால், வியாதி உண்டாகாது.         - பால பாடம், 2003:32, 1959:23-24, 1950:23-24

ஸ்நானம் - குளியல்
வஸ்திரம் - ஆடை, துணி

இது செய் இது செய்யாதே

                                             34ஆம் பாடம்
பகலிலும் விடியற் காலத்திலும் நித்திரை பண்ணாதே.
இரவில், ஒன்பது மணிக்குப் பின்பே, நித்திரை பண்ணு.
நித்தமும், விடியுமுன், நித்திரை விட்டு எழுந்துவிடு.
நித்திரை விட்டு எழுந்த உடனே, கடவுளைத் தோத்திரம் பண்ணு.
பல் விளக்கி, நாக்கு வழித்து, வாய் கொப்பளித்து, முகம் கை கால், கழுவி, ஈரந் துவட்டு.
நின்றுகொண்டாவது, நடந்துகொண்டாவது, பல் விளக்கலா காது.
புத்தகத்தை எடுத்துப் புதுப் பாடத்தையும், பழம் பாடங்களையும் படி.
                                    - பாலபாடம் 1950:22-23, 1959:22-23, 2003:32
                                                                                                               

புதன், 21 ஆகஸ்ட், 2013

நாட்கணக்கு முறை

33ஆம் பாடம்

ஒரு காலை தொடங்கி மற்றைக் காலை வரையும் உள்ள காலம் ஒரு நாள்.
ஆங்கிலேயர்கள், ஒரு நாளை, இருபத்து நான்கு மணிநேரமாகப் பிரித்திருக்கிறார்கள்.
இந்தியர்கள், ஒரு நாளை, அறுபது நாழிகையாகப் பிரித்திருக்கிறார்கள்.
முப்பது நாழிகை பன்னிரண்டு மணி.
பதினைந்து நாழிகை ஆறு மணி.
ஏழரை நாழிகை மூன்று மணி.
ஐந்து நாழிகை இரண்டு மணி.
இரண்டரை நாழிகை ஒரு மணி.
ஒன்றேகால் நாழிகை அரை மணி.
ஏழு நாடகள் கொண்டது ஒரு வரம்.
ஒரு வாரத்திலே, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன்(ம்), வெள்ளி, சனி என்னும் ஏழு நாட்கல் உண்டு.
நாலு வாரம் கொண்டது ஒரு மாதம்.
பன்னிரண்டு மாதம் கொண்டது ஒரு வருஷம்.
                                       - பால பாடம் 1950:22, 1959:22, 2003:31-32 

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா



பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பற்றிய சில குறிப்புகள்
பிறப்பு: 26.7.1933                    இறப்பு: 2. 12. 2008




          18.06.64 ஆம் ஆண்டு இராஜபாளையம் காந்தி கலைமன்றத்தில் தவத்திரு. குன்றக்குடி அடிகளாரால்  பன்மொழிப்புலவர் என்னும் பட்டம் அளித்துச் சிறப்பிக்கப் பட்டவரே மு.கு.ஜகந்நாதராஜா. அக்காலத்தில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்டவர். தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்க எத்தனையோ நல்லறிஞர்கள் பல்வேறு வகையிலும் தொண்டு செய்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகத் திகழ்ந்தார் மு.கு.ஜகந்நாதராஜா.
இவர் தானாகவே தெலுங்குமலையாளம்கன்னடம்,சம்ஸ்கிருதம்பாலிபிராகிருதம்ஹிந்திஆங்கிலம் முதலிய மொழிகளைக் கற்று அனைத்திலும் இலக்கியஇலக்கணப் புலமை பெற்று கவி எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். 
            திருக்குறள்புறநானூறுகுறிஞ்சிப்பாட்டு முதலிய தமிழ் இலக்கியங்களைத் தெலுங்கிலும் (இவர் மொழிபெயர்த்த திருக்குறளையும்புறநானூற்றையும் தெலுங்கு பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது)முத்தொள்ளாயிரம் நூலைத் தெலுங்கு,மலையாளம்கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஆக்கம் செய்து அவரே வெளியிட்டுள்ளார். 
            பிராக்கிருத மொழிப் பேரிலக்கியம் "காதாசப்தசதி". இவ்விலக்கியத்தைக் குறுந்தொகை போலவே பாடல்களாக மொழியாக்கம் செய்துள்ளார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்காக "தமிழும் பிராகிருதமும்" என்ற ஆய்வு நூல் எழுதினார்.
            இவரைப் போல ஒரு பன்மொழி ஆய்வாளர்இலக்கிய அறிஞர்,தத்துவ மேதைதென்னிந்தியாவிலேயே இல்லை என்று பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். படைப்புலகப் பிதாமகன்பல எழுத்தாளர்களின் செவிலித்தாய்பலரையும் உருவாக்கிய பண்பாளர் என்றெல்லாம் பலவாறு பாராட்டப்பட்டவர். 
            "ஆதர்ஸ் கில்ட் ஆப் இந்தியா" என்ற அமைப்பின் மாநாடுகள்,புதுதில்லிலக்னெளஐதராபாத்து போன்ற நகரங்களில் நடந்தபோது,அங்கிருந்த தமிழ்ச் சங்கங்களில் பங்கேற்று பல ஆய்வுரைகளை நிகழ்த்தினார். இதனால் பல்கலைக் கழகங்கள் ஜகந்நாதராஜாவை அழைத்துச் சிறப்பித்தன. 
இச்சிறப்புமிகு பன்மொழிப்புலவர் 1958ஆம் ஆண்டுபூவம்மா என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். அவர்களுக்கு மூன்று மகன்கள்ஒரு மகள் உள்ளனர். 
            மணிமேகலை இலக்கியத்தில் ஜகந்நாதராஜாவுக்கு இருந்த ஈடுபாடு காரணமாகப் பல ஆய்வுகளைச் செய்தது மட்டுமல்லாமல், 1958இல் மணிமேகலை மன்றம் ஒன்றைத் தோற்றுவித்தார். அம்மன்றம்ஆக்கப்பூர்வமான பல இலக்கியப் பணிகளைச் செய்து,சென்ற ஆண்டு பொன்விழாவும் கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.  இலக்கிய ஐயப்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து பல அறிஞர்கள் ஜகந்நாதராஜாவைக் காண வருவார்கள். அவர்கள் அனைவரிடமும் அன்புடன் பழகிஅவர்களின் ஐயப்பாடுகளை நீக்கி அனுப்பிவைப்பார்.  தன்னிடம் இருந்த நூல்களை (பல்வேறு மொழி இலக்கிய ஆய்வு மற்றும் தத்துவ நூல்கள்) தனி நூலகமாக ஆக்கினார்.
            "ஜகந்நாதராஜா இலக்கியத் தத்துவ ஆய்வு நூலகம்" என்ற பெயரில் இன்றும் அந்நூலகம் அவரது மருமகனார் டாக்டர் இராதாகிருஷ்ண ராஜாவால் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நூலகத்தில் அனைத்து நூல்களும் இடம்பெற்றிருக்கும். இராமாயணம் எத்தனை மொழிகளில் வெளிவந்ததோ அவை அனைத்தையும் இந்நூலகத்தில் காணலாம். இந்நூலகத்தின் மூலம் தொடர்ந்து பல ஆய்வறிஞர்கள் பலன் பெற்றுச் செல்கின்றனர்.  80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிகுடியரசுத் தலைவர் பரிசு மற்றும் மலேசிய பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் போன்றவற்றைப் பெற்றுள்ளார் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. 
பன்மொழிப் புலவரின் படைப்புகளில் சில வருமாறு:
1.    கற்பனைப் பொய்கை(கவிதைத் தொகுப்பு), 1972, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்.
2.    தரிசனம்(வசன கவிதை),1972, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்.
3.    காவிய மஞ்சரி(குறுங்காவியங்கள்), 1986, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்.
4.    சிலம்பில் சிறுபிழை(இலக்கியத் திறனாய்வு), 1968, விசுவசாந்தி பதிப்பகம்,


இராஜபாளையம்.
5.    வான் கலந்த வாசகங்கள்(வானொலி உரை), 1980, மணிமேகலை மன்றம்,


இராஜபாளையம்.
6.    தமிழும் பிராகிருதமும், 1992, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
7.    மணிமேகலை ( இவர் இராஜபாளையத்தின் மணிமேகலை மன்றத் தலைவர்), மணிமேகலைமன்றம், இராஜபாளையம்.
8.    இந்திய மொழிகளின் ஒப்பிலக்கியம், 1994, நர்மதா பதிப்பக‌ம், 


சென்னை.
9.     வடமொழி வளத்துக்குத் தமிழரின் பங்கு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை .‍
10. தமிழக ஆந்திர வைணவத் தொடர்புகள், 2005, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
11. ஆபுத்திர காவியம்
12. தெரு  புதுக் காவியம்
13. பிஞ்சுக் கரங்கள்
14. ராஜுக்கள் சரித்திரம்
15. திராவிட மொழிகளில் யாப்பியல்
16. கவித்தொகை
17. அறிவுக் கதம்பம் (வானொலி உரை), 1993, மணிமேகலை மன்றம், இராஜபாளையம்

மொழிபெயர்ப்புகள்
1.    கன்யா சுல்கம், 1963, பாரி நிலையம், சென்னை.
2.    சேரி , 1984, சாஹித்ய அகாடமி, டெல்லி
3.    ஆமுக்த மால்யத, தெலுங்குப் பல்கலைக்கழகம், ஹைதராபாத்
4.    வேமனா, 1992, பாரி நிலையம், சென்னை
5.    களாபூரணோதயம் (தெலுங்கு காவியம்)தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு
6.    சுமதி சதகம்
7.    தேய்பிறை
8.    கந்துகூரி வீரேசலிங்கம் கட்டுரைகள்
9.    காதா சப்த சதி , 1981, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்
10. வஜ்ஜாலக்கம் (பிராகிருத மொழி அறநூல்)2005, தமிழினி, சென்னை 14
11. கர்பூர மஞ்சரி (பிராகிருத மொழி நாடகம்)
12. சன்மதி சூத்திரம் (சமண தத்துவம்)
13. தீகநிகாயம் (பௌத்த தத்துவம்), சுந்தர நிலையம், சென்னை
14. உதானம் (பௌத்த தத்துவம்)
15. மிலிந்தா பண்ஹா (பௌத்த தத்துவம்) (மினாந்தரின் கேள்வி)
16. விக்ஞப்தி மாத்ரதா சித்தி (பௌத்த தத்துவம்)
17. ஔசித்ய விசாரசர்ச்சா வடமொழித் திறனாய்வு நூல், 1989, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்
18. நாகானந்தம் வடமொழி நாடகம் (1992, பீக்காக் பதிப்பகம், சென்னை
19. குந்தமாலா வடமொழி நாடகம்
20. சாணக்ய நீதி வடமொழி நீதிநூல் 1986, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்
21.  சாருசர்யா வடமொழி நீதிநூல்
22. சாதன ரகசியம் வேதாந்த நூல்அனுபவானந்த கிரந்தமாலா, பாபட்லா (ஆந்திரா)
23. சிவசரணர் வசனங்கள்
24. பம்ப்ப பாரதம் (கன்னட காவியம்)
25. பிரேம கீதம் மலையாளக் கவிதை
26. மகாயான மஞ்சரி, 2007, பவுத்தக் கல்வி மையம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் வருமாறு:
1. சைல கீதமு (குறிஞ்சிப்பாட்டு), விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்

2. முத்யால ஹாரமு (முத்தொள்ளாயிரம்), விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்
3. பாரதி சமகாலீன பாவமுலு, சாகித்ய அகாதமி
4. புண்யக்ஷேத்ராலு 1989, திருமுறைத்தலங்கள் வெளியீட்டுக்குழு, பெங்களூர்
5. திருக்குறள் தேடகீதுலு
6. தமிழ காவியாம்ருதம்
7. வெலி நாணூறு (புற நானூறு)
8. முத்தொள்ளாயிரம் (மலையாளம்)
9. முக்த ஹார (கன்னடம்)

பார்வை

வேந்துதொழில், வேந்துறுதொழில், வேந்துவிடுதொழில்: கருத்தியல்


-       சத்தியராஜ்
            வேந்துதொழில்வேந்துறுதொழில்வேந்துவிடுதொழில் ஆகிய மூன்று சொல்லாட்சிகள் சங்கப்பாடல்களில் காணப்பெறுகின்றனஅம்மூன்றும் வினை அடிப்படையில் நுண்ணிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளனஅவ்வேறுபாடுகளைத் தொல்காப்பியம்சங்கப்பாடல்கல்வழிக் கண்டறிவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தொல்காப்பியத்தில் வேந்துதொழில்வேந்துறுதொழில்வேந்துவிடுதொழில்:
            தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் வேந்தற்குரிய தொழில்கள் தொடர்பான சொல்லாட்சிகளைக் கொண்டிலங்கும் நூற்பாக்கள் உள்ளனஅந்நூற்பாக்களில் வரும் வேந்தன் தொழில் தொடர்பான சொல்லாட்சிகளைப் பின்வருமாறு பகுத்து விளக்க இயலும்அவையாவன,
·         வேந்துதொழில்
·         வேந்துறுதொழில்
·         வேந்துவிடுதொழில்
வேந்துதொழில்:
            வேந்துதொழில் என்பதைச் சுட்டும் நூற்பா அகத்திணையியலில் பிரிவை உணர்த்துவதாக அமைந்துள்ளதுஅந்நூற்பா வருமாறு:
            வேந்துவினை இயற்கை வேந்தன் ஒரீஇய
            ஏனோர் மருங்கினும் எய்திடன் உடைத்தே                        – தொல்.பொருள்.34
இந்நூற்பாவிற்கு இளம்பூரணர்வேந்தனது வினை இயற்கையாகிய தூது வேந்தனை ஒழிந்த வணிகருக்கும் வேளாளருக்கும் ஆகுமிடன் உடைத்து என்றும், வேந்தனது வினை என்பது வேந்தற்குரிய வினை என்றும் சுட்டியுள்ளார். வேந்து வினை என்பதில், வினை என்பது செயலைக் குறிக்கும். அச்செயல் ஓதல், வேட்டல், படைவழங்கல், குடியோம்பல் என்பதாகும். ஆதலின், வேந்து வினையை வேந்துதொழில் என்று சுட்டுவதே மரபாக உள்ளது.
வேந்துறுதொழில்:
            தூது, காவல் காரணமாகப் பிரியும் காலத்தில் வேந்துறுதொழிலானது நிகழும் என்பது இளம்பூரணர் கருத்து. இதனை,
            வேந்துறு தொழிலே யாண்டினது அகமே               – தொல்.பொருள்.187
என்பது சுட்டும். இந்நூற்பாவிற்கு வேந்தற்குற்றவழிதூது காவல் என அவ்வழிப்பிரிவிற்கும் ஆண்டினது அகமே காலம் என்றவாறு என்று பொருள் கூறுவர் இளம்பூரணர்அதாவது போர்தூதுநாடுகாவல்  ஆகிய பிரிவுகள் ஓர் ஆண்டுக்குட்பட்டவை என்பர் தமிழண்ணல்அப்பிரிவின் போது மட்டும் வெந்தனுக்கு உதவும் வினை நிகழும்.
வேந்துவிடுதொழில்:
            வேந்துவிடு தொழிலைச் சுட்டும் நூற்பாக்கள் இரண்டுஅவை வருமாறு:
            வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
            ஆதந்து ஓம்பல் மேவற் றாகும் – தொல்பொருள்.60
            வேந்துவிடு தொழீன் படையும் கண்ணியும்
            வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே – தொல்பொருள்.626
இவைவேந்தனால் ஏவப்பட்ட தொழில் காரணமாகக் காவலர்கள் செல்லும் செலவைக் குறிப்பதாக அமைந்துள்ளனஇளம்பூரணர்தொழிலினானே படையுங் கண்ணியும் வேளாண்மாந்தருக்கும் உளதாகுமென்றவாறு என்று கூறுவர்இவற்றால் வேந்து வினை என்பது வேந்தற்கு உரிய வினையையும்வேந்துறுதொழில் என்பது தூது கவல் காரணமாக வேந்தற்குற்றவழி உதவும் வினையையும்வேந்துவிடுதொழில் என்பது வேந்தரால் ஏவப்பட்ட காவலருக்குரிய தொழிலையும் குறிக்கும் என்பது பெறப்படும்.
சங்கப்பாடல்கலில் வேந்துதொழில்வேந்துறுதொழில்வேந்துவிடுதொழில்:
             சங்கப்பாடல்கலில் வேந்துதொழில்வேந்துறுதொழில்வேந்துவிடுதொழில் ஆகிய மூன்றும் குறிக்கப் பெற்றுள்ளனஅவை ஆறு இடங்களில் அமைந்துள்ளனஅவறிற்கான விளக்கங்கள் வருமாறு:
·         வேந்தற்குரிய வினை
·         வேந்தற்குற்றுழி உதவும் வினை
·         வேந்தனால் ஏவப்பட்ட காவலர் வினை
வேந்தற்குரிய வினை:
            வேந்துதொழில் என்னும் சொல்லாட்சி சங்கப்பாடல்களில் மூன்று இடங்களில் காணப்பெறுகிறதுஅதற்கான பாடலடிகள் வருமாறு:
            மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே   – ஐங். 443:1
          ஏந்துகோட்டு யானை வேந்துதொழில் விட்டென      – ஐங். 498:2
          வேந்துதொழி லயரு மருந்தலைச் சுற்றமொடு           – புறம். 498:7
இம்மூன்று பாடலடிகளும் வேந்தனது தொழிலையே குறித்துநின்றனசான்றாகபொ.வே.சோமசுந்தரனார்ஔவை சுதுரைசாமிப்பிள்ளை ஆகியோர்நம் மன்னவன் தான் மேற்கொண்டுள்ள இப்போர்த் தொழிலைக் கைவிடுவனாயின் என்பர்இப்பொருண்மை மன்னன் மேற்கொள்ளும் வினையைக் குறித்தது.
வேந்தற்குற்றுழி உதவும் வினை:
            அகநானூறு 254ஆம் பாடலில் மட்டும் வேந்துறுதொழில் குறிக்கப்பெற்றுள்ளதுஅப்பாடலடி வருமாறு:
            வேந்துறு தொழிலொடு வேறுபுலத்து அல்கி            – அகம். 254:10
இவ்வடிக்கு ந.மு.வேங்கடசாமி நாட்டார்கரந்தைக் கவியரசு வேங்கடாச்சலம் பிள்ளை ஆகியோர் வேந்தற்கு உற்றுழி உதவும் வினையினால் இவ்வேற்று நாட்டின்கண் வந்து தங்கி என்று பொருள் குறிக்கின்றனர்இவ்வுரையைத் தழுவியே பின்வந்த உரைகார்ரும் உரைத்துள்ளனர்இவற்றுள் உற்றுழி என்பதற்கு துன்புறு கலத்தில் இடையூறுகவலிசேதம்தீமைதுன்பம் விளவித்தல்வெட்டல் முதலிய காரணங்களினால் உடம்பில் வரும் காயம்அடைந்த காலம்ஊறுபாடுற்ற காலம் என்பதாகத் தமிழ் அகராதியும்தமிழ்ச்சொல் அகராதியும் பொருள் குறிக்கின்றனஇதனடிப்படையில் வேந்தற்கு உற்றுழி என்பதற்குவேந்தனுக்குத் துன்பம் நிகழும் கலத்தில் உதவக்கூடிய பிறரது வினையைக் குறிக்கும் எனலாம்.
வேந்தனால் ஏவப்பட்ட காவலர் வினை:
            சங்கப்பாடல்களில் குறுந்தொகையிலும், புறநானூற்றிலும் இரு இடங்களில் வேந்துவிடுதொழில் காணப்பெறுகின்றது.
            வேந்துவிடு தொழிலொடு செலினும்   – குறுந். 242:2
          வேந்துவிடு தொழிலொடு சென்றனன்          – புறம். 319:13
என்ற இவ்விரு பாடலடிகளும் வேந்தனால் ஏவப்பட்டத் தொழிலைக் குறித்தே நிற்கின்றன. இதனை, வேந்தனால் ஏவப்பட்ட தொழிலை மேற்கொண்டு வேற்றூருக்குச் சென்றாலும் என்று உ.வே.சா. சுட்டியுள்ளார். மேலும் புறநானூற்றடிக்கு பகை மேற்சென்றனன் என உ.வே.சா.வும், ஔவை சு. துரைசாமிப்பிள்ளையும் சுட்டியுள்ளனர். இப்பொருண்மைகளும் வேந்தனால் ஏவப்பட்ட தொழிலுக்குக் கவலர் செல்வதைக் குறித்து நிற்கின்றன என்பதை அறியலாம்.
கருத்தியல்:
            மேற்கண்ட தொல்காப்பியம், சங்கப்பாடல் கருத்துகளைப் பின்வருமாறு அட்டவணைப்படுத்திக் காட்ட இயலும்.
பொருண்மைகள்
தொல்காப்பியம்
சங்கப்பாடல்
குறுந்.
ஐங்.
அகம்.
புறம்.
வேந்துதொழில்
வேந்தற்குரிய வினை (பொருள்.34)
-
வேந்தன் தான் மேற்கொண்டுள்ள வினை(443:5, 498:2)
-
அரசன் தனகுரிய அரசியற் தொழில் (285:7)
வேந்துறு
தொழில்
தூது, காவல் காரணமாக வேந்தற்குற்றவழி (பொருள்.187)
-
-
வேந்தற்குற்றுழி உதவும் வினை (254:10)
-
வேந்துவிடு
தொழில்
வேந்தரால் ஏவப்பட்ட வினை (பொருள். 60, 626)
வேந்தரால் ஏவப்பட்ட தொழில் (242:2)
-
-
வேந்தரால் ஏவப்பட்ட தொழில் (319:13)

இவ்வட்டவணைவழி வேந்துதொழில், வேந்துறுதொழில், வேந்துவிடுதொழில் என்பதற்கான நுண்ணிய வேறுபாடுகளை அறியமுடியும். வேந்து, வேந்துறு, வேந்துவிடு ஆகியன ஒரெ பொருண்மையைத் தருவனபோல் அமைந்தாலும், வெவ்வேறு பொருண்மைகளையே கொண்டிலங்குகின்றன.
தொகுப்புரை:
·         வேந்துதொழில் என்பது வெந்தனெ மேற்கொள்ளும் தொழிலைக் குறிப்பது.
·         வேந்துறுதொழில் என்பது போர், தூது, நாடுகாவல் காரணமாக மேற்கொள்ளுவோர் தொழிலைச் சுட்டுவது.
·         வேந்துவிடுதொழில் என்பது வேந்தரால் ஏவப்பட்ட போர்த்தொழிலைக் கொள்ளும் காவலருக்குரியது.
(இக்கட்டுரை சூன் 5, 2010 அன்று சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெற்றப் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப் பெற்றதும், அக்கருத்தரங்க ஏட்டில் இடம்பெற்றதுமாகும்)