செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

குறுந்தொகையில் யானை பற்றிய பதிவுகள்

                                                                                                           -       . சத்தியராஜ்
சங்க இலக்கியத்தில் யானை பற்றிய பதிவுகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. அவற்றுள் குறுந்தொகையில் அமைந்துள்ள யானை பற்றிய பதிவுகளை மரபுநிலை அடிப்படையிலும் படைப்புநோக்கு அடிப்படையிலும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
முன்னாய்வு
      சங்க இலக்கியதில் விலங்கின விளக்கம் எனும் தலைப்பின்கீழ் விலங்குகளின் உடலுறுப்பு, உணவுமுறை, வாழுமிடம், அவற்றின் செயல்பாடுகள் ஆகியனவற்றை மிக விரிவாக பி.எல். சாமி எடுத்தியம்பியுள்ளார். அவர் விலங்கு நூலார் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார். அவற்றுள் குறுந்தொகையில் 19 இடங்களில் அமைந்துள்ள யானை பற்றிய பதிவுகளைக் கூறியுள்ளார். அவ்வாய்வின் தொடர்ச்சியாக குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள யானை பற்றிய பதிவுகளை மரபுநிலை மற்றும் திணைப்பகுப்பு அடிப்படையில் வகைப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.
குறுந்தொகையில் யானை பற்றிய பதிவுகள்
குறுந்தொகையில் யானை பற்றிய பதிவுகள் 64 இடங்களில் அமைந்துள்ளன. அப்பதிவுகளை மரபுநிலை அடிப்படையில் பின்வருமாறு வகைப்பாடு செய்யலாம். அவை,
·         பொதுப்பெயர்(யானை)
·         இளமைப்பெயர்(கன்று, குழவி)
·         ஆண்பாற்பெயர்(களிறு, வேழம்)
·         பெண்பாற்பெயர்(பிடி, பெட்டை)
பொதுப்பெயர்(யானை)
            கன்று, பிடியென பால்வேறுபாட்டுடன் குறிக்கும் பெயர்கள் யானைக்கு உண்டு. இருப்பினும் யானை எனப் பொதுவாக அழைக்கும் பழக்கம் இன்றுமட்டுமல்லாது சங்கப் புலவரிடமும் அமைந்துள்ளது. அதனடிப்படையில் முப்பது(30) இடங்களில் யானை பற்றிய பதிவுகள் அமைந்துள்ளன. அவற்றைத் திணை அடிப்படையில் பின்வருமாறு வரைபடமாக்கலாம்.
                                                                                     பொதுப்பெயர்(யானை)
குறிஞ்சி
முல்லை
மருதம்
பாலை
1:2,13:1,36:2, 54:3,119:2,129:6,136:3-4,141:4,142:4,161:7,170:3,179:6,247:5,284:1,333:2,357:6

279:6
34:5,75:3,169:1,258:4,359:4
77:4,79:1,232:3-5,255:4-5,260:5-7,331:4,343:2,348:2,388:4-6
இவற்றுள் குறிஞ்சிப் பாடல்களில் 16 இடங்களிலும், முல்லைபாடல்களில் ஓரிட்த்திலும், மருதப்பாடல்களில் 5 இடங்களிலும், பாலைப் பாடல்களில் 9 இடங்களிலும் இடம்பெற்றுள்ளன. நெய்தல் பாடல்களில் யானை பற்றிய பதிவு இடம்பெறாமைக்குத் திணைசார் வாழ்வியலே காரணமாக அமையலாம்.
இளமைப்பெயர்(கன்று, குழவி)
            பார்ப்பு, பறழ், குட்டி, குருலை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி என்ற ஒன்பதும் இளமைப் பெயர்கள் என்பர் தொல்காப்பியர். அவற்றுல் யானைக்குரிய இளமைப் பெயர்களை,
            யானையுங் குதிரையும் கழுதையும் கடமையும்
            மானோ டைந்தும் கன்றெனற் குரிய                      – தொல்.பொருள். 559
என்றும்,
            குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை           – தொல்.பொருள். 563
என்றும் சுட்டுவார். இவற்றால் கன்றும் குழவியும் யானைக்கு இளமைப் பெயர்கள் என்பது பெறப்படும். இவ்விளமைப்பெயர்கள் குறுந்.225:1-2, 394:1 ஆகிய இரு இடங்களில் காணப்பேறுகின்றன. இவ்விரு அடிகளும் தலைவனை இயற்பழிக்குமுகமாக இடம்பெற்றுள்ளன. அப்பாடலடிகள் வருமாறு:
            கன்றுதன் வயமுலை மார்ந்த
            தினைபிடி உண்ணும் பெருங்கல் நாட!      – குறுந்.225:1-2
            முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி – குறுந்.394:1
என்ற அடிகள் சுட்டும்.
ஆண்பாற்பெயர்(களிறு, வேழம்)
            ஆண்பாற்பெயர்களாக எருது, ஏற்றை(ஏறு), ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதல், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்பனவும் பிறவும் அமையும் என்பர் தொல்காப்பியர். அவற்றுள் களிறு யானைக்குரிய ஆண்பாற்பெயராக அமையும் என்று பின்வரும் நூற்பாவில் கூறியுள்ளார். அந்நூற்பா வருமாறு:
            வேழக் குரிதே விதந்துகளி றென்றல்                     – தொல்.பொருள். 579
எனும் நூற்பாவில் கூறியமைபோல் குறுந்தொகையில் களிறு எனும் ஆண்பாற்பெயர் 32 இடங்களில் பயின்றுவந்துள்ளமை அறியப்பெறுகின்றன. அப்பதிவு ஐந்திணைகளிலும் இடம்பெற்றுள்ளன.
       இவற்றுள் குறிஞ்சிப் பாடல்களில் 10 இடங்களினும் முல்லை நெய்தல் பாடல்களில் ஓரிடத்திலும் மருதப்பாடல்களில் இரு இடங்களிலும் பாலைப் பாடல்களில் 8 இடங்களிலும் அமைந்துள்ளன.
பெண்பாற்பெயர் (பிடி, பெட்டை)
          பெண்பாற் பெயர்களாக பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி என்ற பதின்மூன்று பெயர்களாக அமைவன என்பார் தொல்காப்பியர்.  இவற்றுள் யானைக்குரிய ஆண்பாற் பெயர்களைப் பின்வரும் நூற்பா சுட்டுகிறது. அந்நூற்பா வருமாறு:
                பிடியென் பெண்பெயர் யானை மேற்றே                          தொல்.பொருள்.596
இப்பாடலடியில் பிடி என்பது யானைக்குரிய பெண்பாற்பெயராக அமைந்தமை அறியப்பெறுகின்றது. இப்பெயர் குறுந்தொகையில் பன்னிரு இடங்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் குறிஞ்சிப் பாடல்களில் 7 இடங்களிலும், முல்லைப் பாடல்களில் ஓரிட்த்திலும் பாலைப் பாடல்களில் 4 இடங்களிலும் அமைந்துள்ளன. மருதம், நெய்தல் ஆயிரு திணைப் பாடல்களில் இடம்பெற்றமைக்குத் திணைசார் வாழ்வியல் காரணமாக அமையலாம்.
படைப்பு நோக்கம்
                சங்கப் புலவர்கள் யானையைப் படைத்தமைக்குரிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். அவை: அன்பைப் புலப்படுத்தும் முகமாக, சுற்றத்துடன் இணைந்து வாழும் பாங்கு மக்களிடமும் அமைதல் வேண்டுமென வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. பாலை பாடல்களில் இவ்விரு தன்மைகள் இடம்பெற்றுள்ளன. பெண் யானையின் பசியை நீக்குவதற்காக ஆண் யானை மெல்லிய கிளைகளையுடைய யாமரத்தின் பட்டையை உரித்து, அதன் நீரை, பெண்யானையைப் பருகச் செய்வது அன்பைப் புலப்படுத்துவதாகவும்; பாலை நிலத்தில் வளர்ந்த யாமரங்களின் அடிப்பகுதியில் குத்தித் தன் பெரிய சுற்றத்தின் பசியைத் தீர்ப்பதாகவும் அமைந்துள்ளன(நித்தியா அறவேந்தன், பழந்தமிழகத்தில் வறுமையும் வளமையும்,பக்.3-4) என்று குறித்திருப்பதும் கவனத்திற்குரிய ஒன்றாகும். இதனைக் குறிக்கும் பாடலடிகள் வருமாறு:
                பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
                மென்சினை யாவும் பொளிக்கும்                                        குறுந்.37:2-3
என்று பிடிபசியைத் தீர்க்கும் அன்புறு காட்சியும்,
                சிறுகட் பெருநிரை உறுபசி தீர்க்கும்                  குறுந்.255:4
என்பது களிறு சுற்றத்தின் பசியைத் தீர்க்கும் அன்புறு மற்றும் கடமையுணர் காட்சியும் இடம்பெற்றுள்ளன. மேலும் பாலைப் பாடல்களில் யானையது பசியின் கொடுந்தன்மை இடம்பெற்றுள்ளன. அவை குறுந்.37, 79, 202, 255 ஆகிய பாடலடிகளில் இடம்பெற்றுள்ளை அறியப்பெறுகின்றன. சான்றாக,
                கான யானை தோல்நயந்து உண்ட
                பொரிதால் ஓமை வளிபொரு நெடுஞ்சினை     குறுந்.79:1-2
என்பதாகக் குறிப்பிடப் பெறுகிறது. இவ்வடியில் பாலைநிலத்தில் நீரின்மையால் ஓமை மரத்தின் மரப்பட்டையை உரித்து உண்ணும் பசியின் கொடுந்தன்மை இடம்பெற்றுள்ளது. இத்தன்மைகள் சங்க மக்களின் வறுமைநிலையை மறைமுகமாக எடுத்தியம்புவதாகவும் அமைந்துள்ளன.
                யானைகள் குன்றுகளிலும் மலைகளிலும் சோலைகளிலும் காடுகளிலும் வழும் தன்மையுடையன (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், பக்.278-279) என்பார் பி.எல்.சாமி. அத்தன்மையைக் குறுந்தொகைப் பாடலடியொன்று எடுத்தியம்புகிறது. அப்பாடலடி வருமாறு:
                சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
                தொல்முரண் சோரும் துன்னருஞ் சாரல்                           குறுந். 88:2-3
என்ற அடியில் நெடுநாள் பகையைத் தீர்த்துக் கொள்ளும் யானைகள் வாழுமிடமாக துன்னருஞ் சாரல் இடம்பெற்றுள்ளது. இதுபோல் அமைந்த பாடலடிகளில் குறிஞ்சிநில மக்களின் வாழ்வியற் சார்புகளை காணமுடிகின்றது.
                சங்க மக்களின் வளமை, வறுமை, சமுதாயச் சார்பு, அன்பு வெளிப்படும் தன்மை, வாழிடம் ஆகியன்வற்றை எடுத்தியம்புவதாக யானை எனும் கருப்பொருள் இடம்பெற்றுள்ளது.
தொகுப்புரை
·         பொதுப்பெயர், இளமைப்பெயர்,ஆண்பாற்பெயர், பெண்பாற்பெயர் என்ற பாகுபாட்டில் யானை பற்றிய பதிவுகள் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன.
·         பொதுப்பெயர் அதிக அளவில் பாடப்பெற்றுள்ளன.
·         களிறு பற்றிய பதிவே குறுந்தொகை ஐந்திணைகளிலும் இடம்பெற்றுள்ளன.
·         யானைக் கருப்பொருள் வழி சங்க மக்களின் வாழ்வியற் கூறுகளை அறியமுடிகின்றது.
 (இக்கட்டுரை ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலை அறிவியல் கலைக் கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட பன்னாட்டுக் கருத்தரங்க் வசிக்கப்பெற்றதும், வெளியிடப்பெற்றதுமாகும் - 2010)
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன